திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 2 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. துறையூர் தனி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், திருச்சி மேற்கு கே.என்.நேரு, ஸ்ரீரங்கம் துரைராஜ், திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி பாரிவள்ளல், மண்ணச்சநல்லூர் கதிரவன், முசிறி கருணை ராஜா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவின் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள பழனியாண்டி, லால்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள சௌந்தர பாண்டியன், முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள காடுவெட்டி தியாகராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. துறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் குமார் உள்ளார். இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களான பழனியாண்டி சவுந்தர பாண்டியன் ஸ்டாலின் குமார் ஆகியோர் திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரான கே என் நேருவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து போர்க்கொடி தூக்கி வந்தனர்.
இதனால் சமீப காலமாக அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் இந்த சட்டமன்ற உறுப்பினர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தனர்.
திமுக முதன்மைச் செயலாளராக உள்ள அமைச்சர் கே.என்.நேரு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம் பெற்றிருந்தார். அதேபோல் வேட்பாளர்கள் தேர்விலும் அவர் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் தன்னை எதிர்த்த சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சர் பழி தீர்த்து விட்டதாக அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் தெரிவித்து வருகின்றனர்.


0 Comments