திருச்சிராப்பள்ளி, பிப், 3
திருச்சி திருவெறும்பூருக்கு உட்பட்ட காந்தி நகர் 6 வது தெரு முதல் செல்வபுரம் மற்றும் கக்கன் காலனி ஆகிய பகுதிகளில் இரண்டு தலைமுறையாக 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி குறித்து அரசினுடைய வரைபடம் இல்லாததால், நிலங்களை வகைமாற்றம் செய்யப்படாமலும், பட்டா கிடைக்காமலும் பல தலைமுறையாய் இங்கு வசித்து வரும் மக்களுக்கு பெரும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் பட்டா கொடுக்க அரசு முன் வந்தாலும் அரசின் இன்றைய மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை கட்டச் சொல்கின்றனர்.
இது மிகப்பெரிய தொகையாக இருப்பதால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பயன் இல்லை. எனவே மீண்டும் நினைவூட்டும் வகையில் ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 41 வது வார்டு கிளைகள் - திருவெறும்பூர், காட்டூர் பகுதிக்குழு கிளைகள் சார்பில் செவ்வாய் அன்று திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் இயக்கம் நடந்தது.
மனு கொடுக்கும் இயக்கத்திற்கு காந்தி நகர் கிளை செயலாளர் லாரன்ஸ், கக்கன் காலனி கிளை செயலாளர் நாகூர்மைதீன், நேதாஜி நகர் கிளை செயலாளர் சந்தோஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, லெனின், கார்த்திக்,காட்டூர் பகுதிக்குழு உறுப்பினர் ஜாகீர் உசேன், தனபால், மாதர் சங்கம் நிவேதா ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.


0 Comments