ஜனநாயகம், சமூக நீதி, மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கும் அரசு அமைய வேண்டும்: நாட்டைக்காப்போம் அமைப்பு வலியுறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டது.
சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான “நாட்டைக் காப்போம்” அமைப்பு, 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தங்களது தேர்தல் நிலைப்பாட்டறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை ஆய்வு செய்து, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆகிய அடிப்படை மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து நாட்டைக் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழகத்தின் 17ஆவது சட்டமன்றத் தேர்தல் முந்தைய தேர்தல்களைப் போல சாதாரணமானதல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மாநில அரசியல்களில் தலையீடு செய்து சனாதன கோட்பாடுகள் மற்றும் மதவெறி அரசியலை முன்னிறுத்தி வருவது ஆபத்தான நிலையை உருவாக்கியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சில கொள்கைகள் காரணமாக மாநிலங்களின் உரிமைகள் குறைக்கப்படுவது, சமூக பாகுபாடுகள் அதிகரிப்பது மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவிக்கிறது இந்த நிலைப்பாட்டறிக்கை.
தமிழகத்தில் மதச்சார்பற்ற தன்மை, சமூக ஒற்றுமை மற்றும் மக்கள் நல அடிப்படையிலான ஆட்சி அவசியம் என வலியுறுத்தியுள்ள இந்த அறிக்கை, வாக்காளர்கள் சிந்தித்து விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறது.
அறிக்கையில், அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்; சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்; மாநிலங்களின் சுயாட்சி உறுதி செய்யப்பட வேண்டும்; உணவு, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுடன், தரமான இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாதி ஒழிப்பு மற்றும் ஆவணக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்; இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; போதையில்லாத தமிழகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு நிலையான வளர்ச்சி கொள்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் அரசு நிர்வாக அமைப்புகளும் குடிமை சமூக அமைப்புகளுடன் தொடர்ந்து உரையாடி மக்களின் நேரடி பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆட்சி முழுவதும் தெளிவுத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டியதுடன் அதிகாரத்தின் தவறான பயன்பாடு தடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தவும், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், சமூக ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டவும் இந்த நிலைப்பாட்டறிக்கை வழிகாட்டும் என நாட்டைக்காப்போம் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை விமர்சன பார்வையுடன் ஆதரிப்பதாகவும், ஆளும் கட்சியின் செயல்பாடுகளை ஆண்டுதோறும் “மாதிரி சட்டமன்றம்” மூலம் மக்கள் மத்தியில் விவாதிக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.


0 Comments