07.04.26
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் ரூ.2,000 கோடியில் பிரம்மாண்ட வளர்ச்சி- வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சியின் 57-வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் தெரு, அரசு காலனி, எம்.ஜி.ஆர் நகர், முருகன் நகர், காதிகிராப் காலனி, அந்தோணியார் கோவில் தெரு, நல்ல தண்ணி கேனி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். "மீண்டும் நம் ஆட்சிதான்" எனக்கூறி பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றுகையில்..
எடமலைப்பட்டி புத்தூர் பகுதி அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது, இங்கு ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தில்லை நகர், பெரிய கடைவீதிக்கு இணையாக புதூர் பகுதியை மேம்படுத்த சுமார் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்பகுதியின் அனைத்து சாலைகளும் தரமான சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொல்லாங்குளம் ரூ.40 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் வெள்ள அபாயம் நீங்கியுள்ளது.
குடமுருட்டியிலிருந்து கலைஞர் பேருந்து முனையம் வரை கோரையாற்றின் கரையில் 40 அடி அகல புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது.புதூர் மார்க்கெட் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது, வேலைவாய்ப்பிற்காக ஐடி பார்க் அமைக்கப்பட்டுள்ளது,
30 முதல் 40 ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குக் குறைந்த கட்டணத்தில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளி ரூ.20 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களுடன் 12-ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்பகுதியின் வளர்ச்சி தடையின்றித் தொடரவும், தமிழக முதல்வர் மீண்டும் பொறுப்பேற்று தமிழகத்தை வழிநடத்தவும், உதயசூரியன் சின்னத்திற்குப் பேராதரவு தந்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.



0 Comments