உப்பு சத்தியாகிரக இயக்க 96 ஆம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசுகையில், திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண், 1930-ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் நோக்கி நடைபயணம் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டி.எஸ்.எஸ். ராஜன் பங்களா அருகே அமைந்துள்ள இந்தத் தூண், ஆங்கிலேயரின் உப்பு வரியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தை நினைவுகூறுகிறது.
1930 ஏப்ரல் 13-ல் திருச்சி தியாகி டி.எஸ்.எஸ். ராஜன் இல்லத்தில் தொடங்கி, ஏப்ரல் 30-ல் வேதாரண்யத்தில் முடிவடைந்த உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி இது.ஆண்டுதோறும் ஏப்ரல் 13 அன்று, இந்த நினைவு ஸ்தூபியில் இருந்து வேதாரண்யம் வரை நினைவு யாத்திரை நடத்தப்படுகிறது.மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரைக்கு இணையாகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின் சாட்சியாக இந்த இடம் திகழ்கிறது என்றார்.
தண்ட யாத்திரை குழு தலைவர் சக்தி செல்வகணபதி மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் மாநில இளைஞரணி தலைவர் குலாம் மைதீன், மாநில இளைஞரணி செயலாளர் சிவசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பேராசிரியர் புஷ்பவனம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,மகாத்மா காந்தியின் செய்தியாக “சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல. உண்மையான சுதந்திரம் என்பது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போது அதை தடுத்து நிறுத்தும் சக்தியை பெறுவதுதான் என்று கூறினார்.
காந்தி படத்தில் தண்டி யாத்திரை, உப்புசத்தியாகிரகத்தின் தொண்டர்கள் அடிவாங்கும் காட்சியை பார்த்தவருக்கெல்லாம் அது மெய்சிலிர்க்கும். திருச்சியில் காந்தி தங்கிய இடம் டிஎஸ்எஸ்ராஜன் பங்களா, திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை அருகில் உள்ள காந்தி அஸ்தி மண்டபம், மற்றும்
தேசிய உயர்நிலைபள்ளி காந்தி மரத்தடியில் பேசிய இடம் ஆகியவற்றை பாதுகாத்து சிறப்பான கண்காட்சியகமாக மாற்றினால், இளைஞர்களுக்கு அதை காணும் போது தேசிய உணர்வும். நாட்டுப்பற்றும் வரும் என்றார்.
இந்நாளின் முக்கியத்துவத்தை பற்றியும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் பேசினார்.துரைராஜ்,தட்சிணாமூர்த்தி, கோவிந்தராஜ்,தமிழ்மணி, ராஜா, முஹம்மது ஹக்கீம், சையது புதூர், கோவிந்தசாமி,கருங்காலக்குடி ஆறுமுகம் சக்திவேல், சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார், பாலு உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட பொதுச் செயலாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.


0 Comments