திருச்சி மே 23-
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமான் நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேட்டு - கலைச்செல்வி தம்பதியினர். விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களது மகள் சீதாலட்சுமி (வயது19). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவி சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு மூக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்குத் தேவைக்கு அதிகமான அளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மாணவி சீதாலட்சுமியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என அவரது பெற்றோர், உறவினர்கள், சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை முதல்வர் குமரவேல் நேரில் வந்து மாணவி இறப்புக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாகியும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிடதா காரணத்தால் தகலறிந்து சம்பவ இடத்திற்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்,திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி பாலகிருஷ்ணன்,துணைசபாநாயகர் ரவிகுமார் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் சிருஷ்டிசிங்,கல்லூரி முதல்வர் குமரவேல் ஆகியோர் இறந்த சீதாலட்சமியின் உறவினர்கள், பயிற்சி செவலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரமேஷ் போராட்டக்காரர்களிடம் பேசும்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது என்ற கூறினார். இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இருந்தபோதிலும் பயிற்சி செவிலியர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த செவிலியர்கள் போராட்டத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க முடியாமல் சிறிதுநேரம் பாதிப்பு ஏற்பட்டது.


0 Comments